மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் மகிந்தவின் தீவிர முயற்சி - கையில் பிரம்பை எடுக்க உத்தரவு!
பொதுஜனபெரமுன கட்சியின் ஒழுக்கத்தை மீறும் மக்கள் பிரதிநிதிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தம்புத்தேகமவில் நடந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கவனத்தில் கொண்டு மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளுக்கு தடையேற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்சியின் ஒழுக்கத்தை மீறும், எந்த தகுதியில் இருக்கும் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், எடுக்க வேண்டிய உச்சபட்ச ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச, கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை
இதனால், கிராமங்களில் கட்சியின் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்து கட்சிக்குள் கூடியளவில் ஒழுக்கத்தை பேண வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச, சாகர காரியவசத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தம்புத்தேகம பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க கட்சி நடவடிக்கை எடுத்தது.
கொள்ளை சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்புள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், பிரதேச சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என சாகர காரியவசம் கூறியுள்ளார்.
மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பெரமுன
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எந்த கட்சியிலும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினை ஏற்படலாம்.
அவற்றை குறைத்து மீண்டும் நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது.
கட்சியின் ஒழுக்கத்தை மீறும் எவராக இருந்தாலும் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.