சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ள ராஜபக்சர்கள் - விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோட்டாபய!
சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் இரவைக் கழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதவி விலகும் கோட்டாபய
இந்தநிலையில் அவர் நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் உறுதியளித்தார்.
எனினும் தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாகவும் அந்த செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. 73வயதான கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர், இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இன்று அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
விரைவுச் சேவையில் இருந்து விலகிய அதிகாரிகள்
இதனையடுத்து குடிவரவு ஊழியர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விரைவுச் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்தநிலையில் பசில் ராஜபக்ச, விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார்.
இதற்கிடையில் 17.85 மில்லியன் ரூபா (50,000 டொலர்) பணத்துடன், ஆவணங்கள் நிறைந்த பெட்டி ஒன்று கோட்டாபய ராஜபக்சவினால், அரச அதிபர் மாளிகையில் விட்டுச்செல்லப்பட்டுள்ளது.
கப்பல் மூலம் இந்தியா, மாலைதீவிற்கு தப்பிச்செல்லும் நோக்கம்
அது தற்போது கொழும்பு நீதிமன்றத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக
உத்தியோகபூர்வ தரப்புக்கள் தெரிவித்தன.
இதேவேளை கோட்டாபய மற்றும் பசில் ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாக
தப்பிச்செல்ல ஒரு கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலத்தீவுக்கு
செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்பு தரப்பை கோடிட்டு அச்செய்தி சேவை செய்தி
வெளியிடப்பட்டுள்ளது.