சர்வ கட்சி ஆட்சி முறையை கைவிட்டு புதிய திட்ட நகர்விற்குள் ரணில்!
நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணம் தமக்கு இல்லையென்றாலும் எதிர்கால பொருளாதார திட்டங்களின் போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதிநிதிகளுடன் நேற்று அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்தாலும் அமைச்சு பதவி
இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது, 1941 ஆம் ஆண்டு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி, எதிர்க்கட்சி நிலையையும் வகித்துக்கொண்டு அமைச்சு பதவியையும் ஏற்றுக்கொண்டது.
இதன்படி முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாற்றப்பட்டது. அதே முறையை இலங்கையிலும் செயல்படுத்தலாம் எனவும் ரணில் யோசனை முன்வைத்துள்ளார்.
மக்கள் மீதான பொருளாதார சுமைக்கு தீர்வு
இவ்வாறான நிலையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அமைச்சு பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைக்கு தீர்வுகளை தேடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.