புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்ற இளைஞன் சடலமாக!
மகாவலி கங்கையின் கிளை ஆற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே இவ்வாறு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த இளைஞன் மற்றுமொரு நபருடன் கடந்த 22 ஆம் திகதி கந்தாகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒருவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைகள் பொலன்நறுவை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெலிகந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் இந்த முகாம் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
