கொரோனாத் தொற்றுக்குள்ளான மாணவி உயிரழப்பு!
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் மாரவில வைத்தியசாலையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவி கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அந்த மாணவி நேற்று உயிரிழந்ததாக வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாணவிக்கு கொவிட் வைரஸ் தொற்றி இருந்தமை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாத்தாண்டிய தப்போவ பிரதேசத்தை சேர்ந்த பீ.எம்.ரி.மனிசா குமாரி பெர்னாண்டோ என்ற மாணவியே கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்த மாணவி கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே கொவிட் வைரஸின் வேகமான பரவலுடன் சிறார்களுக்கு ஏற்படக் கூடிய மற்றுமொரு பாரதூரமான நோய் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறார்களுக்கு “மிஸ்சி” என்ற நோய் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நோய் சிறார்களுக்கு ஏற்பட்டால், மரணம் கூட சம்பவிக்கலாம் என கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
“மிஸ்சி” என்ற இந்த நோய் காரணமாக அனைத்து உடல் உறுப்புக்களும் செயலிழக்கக் கூடும். 12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதன் மூலம் இந்த நோயை தடுக்க முடியும்.
தற்போது கொவிட் வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் அல்லது இரண்டு மாதங்களுக்கு சிறார்களுக்கு “மிஸ்சி” நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
இந்த நோய் பாரதூரமானது நோய் ஏற்பட்ட சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்படலாம். மரணமும் ஏற்படலாம். நோய் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது பெற்றோருக்கு தெரியாது.
இரண்டு வாரங்கள் அல்லது இரண்டு மாதங்களில் பிள்ளைகளுக்கு காய்ச்சல், தொண்டையில் வீக்கம், கண் மஞ்சள் நிறமாக மாறுதல், மூச்சு எடுப்பதில் சிரமம், குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீருடன் இரத்தம் வருவது, இதய துடிப்பு குறைவது போன்றவை ஏற்படலாம்.
அதேபோல் அதிர்ச்சிக்கு உள்ளாவது போன்ற அறிகுறிகளும் ஏற்படும் எனவும் மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.