ஆண்டின் இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் முற்றாக ஒழிக்கப்படும்: காவல்துறைமா அதிபர் திட்டவட்டம்
இந்த ஆண்டின் இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை (Operation Yukthiya )நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
இந்த செயற்பாட்டின் மூலம், இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என 138,116 பேரும், பட்டியலிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 965 உறுப்பினர்களுள் 703 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கால்துறைமா அதிபர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கால்துறை விசேடஅதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதற்காக, இலங்கை கால்துறையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சிலரைத் தவிர இந்நாட்டின் பெரும்பாலான பொதுமக்கள் இலங்கை காவல்துறையினர் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் காவல்துறைமா அதிபர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
