கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்! வெளியான அறிவிப்பு
இலங்கையில் புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கசினோ வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே தற்பொழுது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தல்
2010ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கசினோ வியாபாரம் குறித்த சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் இதுவரையில் குறித்த சட்டத்தின் கீழ் எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி புதிய கசினோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கசினோ வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

