வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் மீது மர்மக் கும்பல் அத்துமீறித் தாக்குதல்!
வவுனியாவில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று வவுனியா கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் விபத்து விடுதிக்குள் அத்துமீறி உள் நுழைந்த நான்கு பேரடங்கிய குழுவினர் மீண்டும் அம்மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள், காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பாடசாலை மாணவனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு தாக்குதல் நடத்திய குழுவினர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
