சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் - பிரித்தானியாவின் புதிய முயற்சி!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 46 கீழ் 1 தீர்மானம் காலாவதியானதையடுத்து, புதிய தீர்மானத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மலாவி போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரேரணை தயாரிப்பில் சுமந்திரன்
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிதாக தயாரிக்கப்படவுள்ள பிரேரணையில், மனித உரிமை மீறல்கள், கைதுகள், அவசரகாலச் சட்டம் நடைமுறை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் வரை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என உறுதியளித்திருந்தும் அந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியமை, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்தல், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை என்பன புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக் கூறல் தீர்மானம்
இதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது, நீதியைப் பெற்றுக் கொடுப்பது, யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கு பொறுப்புக் கூறுவது போன்ற விடயங்களும் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.