இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு! மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
இலங்கையில் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படவாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அதேவேளை, குறித்த தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கடல் பகுதிகளை பொறுத்தவரையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யுமெனவும் காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
அதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
மேலும், புத்தளத்திலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

