தாய் மற்றும் மகள் கொன்று எரிப்பு- இலங்கை அகதிகள் கைது
தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தமிழகத்தின் இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக கடமையாற்றிய 58 வயதான பெண், அவரது 34 வயதான மகளின் உடல்கள் கருகிய நிலையில் நேற்று முன்தினம் (09) மண்டபத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.
குறித்த வீட்டில் கட்டட பணிகளில் ஈடுபட்டு வந்த இலங்கை அகதிகள் மூவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தமிழக பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். டிசம்பர் 6 ஆம் திகதி கூரான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த குழுவினர், தூக்கத்தில் இருந்த தாயையும் மகளையும் தாக்கிக் கொலை செய்து தடயத்தை மறைக்கும் நோக்கில் உடல்களை தீயிட்டு கொளுத்திவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மண்டபம் பொலிஸார் உயிரிழந்தவர்களின் வீட்டில் ஊழியர்களாக பணியாற்றிய மண்டபம் முகாமில் வசித்த 30 மற்றும் 35 வயதான இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை தமிழக பொலிசார் தேடி வருகின்றனர்.