கிளிநொச்சி மைதானத்தை கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கவேண்டும் நாடாளுமன்றில் கோரிக்கை! (நேரலை)
மூன்றாம் இணைப்பு
கிளிநொச்சி பொது மைதானத்தை விளையாட்டு அமைச்சின் பொறுப்பில் இருந்து கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
குறித்த பிரதேச சபைக்கு கிளிநொச்சி மைதானத்தை பராமரிக்க முடியும் என்றும், இதற்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள கிளிநொச்சி மக்களிடம் இருந்து உதவியை பெற்று மைதானத்தை பராமரிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மைதானத்தை புனரமைக்கும் பணிகள், 12ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டாம் இணைப்பு
வடக்கு கிழக்கில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்து தரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன், இந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபா மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதியமைச்சர், குறித்த வீடுகளுக்கு 6 லட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என்று சாணக்கியன் தெரிவித்தார்
முதலாம் இணைப்பு
நாட்டில் இடம்பெற்று வரும் நெருக்கடி நிலைமைகளிலும் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் இடம்பெற்று வருகின்றது.

