மக்களால் நிராகரிக்கப்பட்ட கோட்டாபய தலைமையிலான அரசுடன் கைகோர்க்கத் தயார் இல்லை! சஜித் பதிலடி
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைமையுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இல்லை என்று எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது,
"இடைக்கால அரசாங்கங்கள், தற்காலிக அரசாங்கங்கள் போன்ற மாற்று வழிகளைப் பற்றி நாங்கள் நிறைய பேசுகிறோம். எனினும், இந்த அரசாங்கங்கள் நிறைவேற்று அரச தலைவர் முறையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா ?
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறைவேற்று அரசதலைவரை உருவாக்கவில்லை, அது ஒரு வரம்புகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரத்திற்குரிய அரசதலைவரை உருவாக்கியது," என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், மிகைப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட அரசதலைவருடன் இடைக்கால அல்லது தற்காலிக அரசாங்கம் எவ்வாறு செயல்பட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரின் கீழ் இடைக்கால அரசுக்கு நாங்கள் சம்மதித்தால் அது துரோகத்திற்கு சமமானதாகும். அத்தகைய துரோகத்தைச் செய்ய நாங்கள் தயாராக இல்லை.
எனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைமையுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இல்லை. அத்தகைய தலைமையுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடவும் தயாராக இல்லை. நாங்கள் எந்த ஒப்பந்தத்திலும் ஈடுபட மாட்டோம், ” என்றார்.