அரச தலைவரின் உறவினரது வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் :வீட்டில் இருந்த விலங்கு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்கவின் வீட்டில் யானைக் குட்டி ஒன்றை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
நிபுண ரணவக்கவின் வீட்டை நேற்று ஆர்ப்பாட்டகாரர்கள் முற்றுகையிட்ட போதே யானைக் குட்டி அங்கு இருப்பதை காண முடிந்துள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு எதிராகவும், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில், மாத்தறை தெனியாய, கலுகல்ஹேன பிரதேசத்தில் உள்ள நிபுண ரணவக்கவின் வீட்டை ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
தெனியாய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து இவர்கள் பேரணியாகச் சென்றதுடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு செல்லும் வழியில் போட்டப்பட்டிருந்த காவல்துறை தடையையும் மீறி, அவர்கள் அங்கு சென்று வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“திருடன்.. திருடன்... நிபுண திருடன்” என ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.
வீட்டிற்குள் எவரும் நுழைய முடியாதபடி வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுண ரணவக்க, ராஜபக்ச சகோதரர்களின் சகோதரியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.