பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022 (படங்கள்)
புனித அந்தோனியாரின் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (12) பிரித்தானியா Oxford பகுதியில் தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள, உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் உதவி இயக்குனர் அருட்தந்தை துஷ்யந்தன் மற்றும் அருட்தந்தை செபநேசரத்தினம் ஆகியோரினால் மாலை 5.00 மணிக்கு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
புனித அந்தோனியார் கொடி ஏற்றப்பட்டு, செபமாலையுடன் திருநாள் திருப்பலிக்கான ஆயத்தம் நடைபெற்றது.
பிரித்தானியாவின் தமிழ் பங்குகள் அமைந்துள்ள Coventry, Milton keynes, Leicester, Southall ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முழுமையான திருநாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாயகத்தை விட்டு தொலை தேசத்தில் வாழ்ந்தாலும் தாயக உணர்வுடன் எமது பண்பாட்டு விழுமியங்களுடன் இத்திருநாள் நடைபெற்றது.
திருப்பலியின் முடிவில் திருச்சுரூப பவனியும் திருச்சுரூப ஆசிர்வாதமும் நிறைவாக வழங்கப்பட்டது.
பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான உறவுகள் பெருநாள் வாழ்த்துக்களை தமக்குள் பரிமாறிக் கொண்டதுடன், அருட்தந்தையர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.
பல்வேறு தரப்பினரின் முழுமையான தயார்படுத்தலுடனும் அருள்தந்தையர்களின் இறை ஆசியுடனும் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புடனும் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தின் 7ம் ஆண்டு பெருவிழா நிறைவுற்றது.
இவ்வளாகத்தில் மாவீரர் நினைவாலயம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம், பிள்ளையார் ஆலயம், புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.