மன்னார் நகரில் தந்தை செல்வாவின் தலையை வீழ்த்திய விஷமிகள்
மன்னார்(mannar) நகர மத்தியில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின்(itak), மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் மன்னார் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முழுமையாக வீழ்த்தப்பட்ட தலை
தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக வீழ்த்தப்பட்ட நிலையில் சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
சந்தேக நபர் ஒருவர் கைது
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
