பலத்த பாதுகாப்புடன் செம்மணியை வந்தடைந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
புதிய இணைப்பு
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சற்றுமுன் செம்மணி மனிதப் புதைகுழிக்கு வருகை தந்தார்.
மூன்றாம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சற்று முன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
உணர்வெழுச்சியுடன் வெடித்துள்ள போராட்டம் - யாழ். வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள்
இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் போராட்டமாக நடைபெறுகிற இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து கொளண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
ஐ.நா ஆணையாளர்
இதன் போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தின் மகஜரொன்றும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஆணையாளர் நேரடியாக வருகிறாரா இல்லையா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
முதலாம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் சந்திப்பார் என்று அறியவருகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் 4 நாள்கள் பயணமாக இலங்கைக்கு (Srilanka) வருகை தந்துள்ளார்.
யாழ். செம்மணி - சித்துப்பாத்தி
நேற்றைய தினம் கொழும்பில் (Colombo) பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய அவர் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வருகின்றார்.
தரைவழியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர், யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவார். அத்துடன், போராட்டக்காரர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்று அறியவருகின்றது.
இதன் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களை ஆளுநர் செயலகத்தில் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
தமிழ் பேசும் அரசியல் கட்சி
இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய தரப்புக்களை இரவு உணவுடன் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறியவருகின்றது.
எனினும், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ்ப்பாணம் வருகைக்கான நிகழ்ச்சி நிரல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வருகைக்கான முழு ஏற்பாடுகளையும் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி பணிமனையே மேற்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இன்றைய தினம் கண்டி, திருகோணமலை பயணத்தை முடித்துக் கொண்டே யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
முன்னதாக, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி மனிதப் புதைகுழிக்கும் நாட்டில் பயணிக்க விரும்பும் சகல பகுதிகளுக்கும் செல்வதற்கு தாம் எந்தவிதமான தடைகளையும் விதிக்கப்போவதில்லை என்று அநுர அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


