தமிழ் மக்களின் பலத்தை இல்லாமலாக்கிய சர்வதேச நாடுகள்
2009ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்களுக்கு இருந்து வந்த பலத்தை இல்லாமலாக்கிய சர்வதேச நாடுகள் அதன் பின்னர் எம்மை ஒருதுளியும் திரும்பிப்பார்க்கவில்லை. இதுதான் யதார்த்தம்.
எமது இருப்பை தக்க வைக்க நாம்தான் போராடவேண்டியிருக்கின்றது. எமது இந்தப் போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும். மக்கள்தான் கிளர்ந்தெழுந்து போராட வரவேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போராட்டத்தின் தொடர்ச்சி
அவர் மேலும் தெரிவித்ததாவது, “வெடுக்குநாறிமலை ஆலய இடித்தழிப்புக்கு எதிராக வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
இவ்வாறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அப்போதுதான் அவை மக்கள் மயப்படுத்தப்படும். இப்போது போராட்டங்களே அருகிச் செல்லும் நிலைமைதான் காணப்படுகின்றது.
2001ஆம் ஆண்டு பொங்குதமிழ் எழுச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள். அது எப்படி பல்கலைக்கழக மாணவர்களால் சாத்தியமாக்கப்பட்டது என்பதைப் பார்க்கவேண்டும். வீடு வீடாகச் சென்று பொங்கு தமிழுக்கு மக்கள் ஆதரவை திரட்டியமையால் சாத்தியப்பட்டது. போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படும் போது தான் அவை வெற்றியடைய முடியும். இதனை நாங்கள் செய்யத் தவறுகின்றோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
இன்று இந்த இடத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு நூற்றுக்கணக்கானவர்களே வந்திருக்கின்றார்கள். வட்டுக்கோட்டையில் பல ஆயிரம் இன உணர்வாளர்கள் இருந்தாலும் அவர்கள் வரவில்லை. மக்களுக்கு எங்களுடைய போராட்டங்களின் தார்ப்பரியங்களை எடுத்துச் சொல்வதன் ஊடாகத்தான் அவர்களை அணிதிரட்ட முடியும்.
அரகலய போராட்டம்
அரகலய போராட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் சரியாக ஓராண்டாகின்றது. கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்னால் தொடங்கிய போராட்டம் எப்படி அவரை நாட்டைவிட்டு ஓட வைத்தது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
அவர்களுடைய போராட்டத்தையும் குண்டர்கள் கொண்டு அடித்துடைத்து ஒழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் போராட்டக்காரர்களின் பக்கம் நின்று அவர்களை வெற்றியடைச்செய்தார்கள். அந்தப் போராட்டம் மக்கள் மயப்பட்டமையாலேயே வெற்றியைப்பெற்றது.
நாங்கள் கடந்த பத்தாண்டு காலமாக அறவழியில் இவ்வாறு சிறு சிறு போராட்டங்களை நடத்துகின்றோம். இப்போதுகூட குருந்தூர் மலை, கன்னியா வெந்நீர் ஊற்று, வெடுக்குநாறி, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, கச்சதீவு புத்தர் சிலை என எல்லாவற்றுக்கும் திட்டுத்திட்டாகப் போராட்டம் நடத்தியிருக்கின்றோம்.
அவை வெற்றியடைந்துள்ளனவா?
நாம் காத்திரமான போராட்டத்தை தொடர் போராட்டமாக நடத்தவேண்டும். அடுத்த மாதம் எங்கள் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கவுள்ளோம்.
அதற்கும் இந்த ஆட்சியாளர்கள் தடைகளை ஏற்படுத்தலாம். மக்கள் திரட்சியின் ஊடாகவே அதனை தகர்த்தெறிய முடியும்.
அன்று இனப்படுகொலை நடந்தது. இப்போது பண்பாட்டுப் படுகொலை, கலாசார படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது.
இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியே நாம் இனவழிப்பு இப்போதும் நடப்பதாகக் குறிப்பிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம்.
எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில், தமிழினத்துக்கு விடிவு கிடைக்கும் வரையில் நாம் போராடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்த மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டமே வந்தது.
புதிய சட்டம் மிக ஆபத்தானது என்று சிங்களவர்களே சொல்லுகின்றனர். கருத்துச் சுதந்திரத்துக்கு பெரும் சவால் விடுக்கும் வகையில்தான் புதிய சட்டவரைவு இருக்கின்றது.
ஊடகங்கள் மீது கிடுக்கிப்பிடி வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு எதிராகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்”, என்றார்.
