கோட்டாபய துமிந்தவுக்கு வழங்கிய மன்னிப்பு இடைநிறுத்தம்! உடன் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இரண்டாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரச தலைவர் மன்னிப்பை இடைநிறுத்தி இலங்கை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தமையை இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு பயணத் தடை விதித்ததுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவும் பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஸ்வர்ணா பிரேமச்சந்திர ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை இன்று நீதிமன்றம் பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு பயணத் தடை விதித்ததுடன் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு சில்வாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சில்வா உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால், கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பு
அதன் பின்னர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 2021 ஜூன் 24 அன்று துமிந்த சில்வாவுக்கு அரச தலைவர் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர், ஆகஸ்ட் மாதம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சில்வா நியமிக்கப்பட்டார்.
இந்த மாத தொடக்கத்தில் துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் நாடு திரும்பியாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
