எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய சவுதியுடன் பேச்சு
இலங்கையில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் சவுதி அரேபிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
சவூதி அரேபிய இராச்சியத்துடன் எரிசக்தி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் விசேட துாதுவர் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாடு முற்றாக முடங்கும் அபாய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஏ.ஏ. ஓர்கோபியை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சவுதி அரேபிய அரசுடன் பேச்சு
இந்தச் சந்திப்பில், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் அனைத்து துறைகளிலும் அதன் பாதகமான பாதிப்புக்கள் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கமளித்தார்.
சவூதி அரேபிய இராச்சியத்துடனான எரிசக்தி ஒத்துழைப்பை மிகவும் அவசரமான விடயமாகக் கருதி, நாளை முதல் 5 ஆம் திகதி வரை அரச தலைவரின் விசேட தூதுவராக இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வதற்கு வசதிகளை வழங்குமாறு பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் நல்குவதாக சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஒர்கோபி உறுதியளித்தார்.