புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்! அதற்கான சூழ்நிலை கிடைக்குமா..! மனோ ஆதங்கம்
உலக நாடுகளிடத்தே ஏற்பட்ட நம்பிக்கை
தற்போது அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களால் இலங்கை தொடர்பில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் நோக்கும் நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பல புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான தடையை நீக்கியுள்ளது. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருந்த போது கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.
இந்த தீர்மானங்களானது இலங்கை தொடர்பில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் நோக்கும் ஒன்றாகும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க செய்த விடயம் மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும், குணதாச அமரசேகர, மொஹமட் முஸம்மில், விமல் வீரவன்ச போன்றவர்கள் எப்போதும் தவறாகவே இருந்தனர். அவ்வாறான தன்மை மாற வேண்டும்.
பொறுப்பை என்னால் ஏற்க முடியும்
இவர்கள் தான் நாட்டை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்கள். இவை மாற வேண்டும். உலக அமைப்புகளுடன் எமது நாட்டைப் பற்றி பேசும் பொறுப்பை என்னால் ஏற்க முடியும்.
தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் 25 இலட்சம் முஸ்லிம்களும் நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் புலம்பெயர் மக்கள்.
எனவே இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கி, நிதிக் கட்டுப்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
