நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - அவுஸ்ரேலியாவில் தடுப்பு முகாமிலிருந்து தமிழ் குடும்பம் விடுதலை
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரின் நீண்ட போராட்டத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைத்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரியா-நடேஸ் குடும்பம் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்படவுள்ளது. குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தடுப்புமுகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பிரியா-நடேஸ் குடும்பம் நிரந்தர விசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வழியைத் திறக்கவில்லை என்றும் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக இவர்கள் community detention-இல் வாழ அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் Alex Hawke கூறினார்.
குருதித்தொற்றுக்காக பெர்த்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் தருணிகாவுடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வாழும் வகையில் பெர்த்தில் இக்குடும்பம் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்
. இதன்படி community detention placement-இன் கீழ் பாடசாலைகள் மற்றும் ஆதரவு சேவைகளை இலகுவில் பெறக்கூடிய இடமொன்றில் இவர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி பிரியா-நடேஸ் குடும்பம் சட்டப்போராட்டத்தை தொடரும் பின்னணியில், தடுப்புக்காவலில் சிறுவர்களை வைத்திருப்பது தொடர்பிலான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு "பொருத்தமான இரக்கத்தை" காண்பிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Alex Hawke கூறினார்.
கடந்த வாரம் பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். தந்தையும் சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருந்த நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பெர்த் சென்று தருணிகாவுடன் இணைகின்றனர்.
தருணிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பிரியா-நடேஸ் குடும்பம் அவுஸ்ரேலியாவில் குடியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுவடைந்ததுடன், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பலரிடமிருந்தும் அரசுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்ட பின்னணியில் குடிவரவு அமைச்சர் Alex Hawke-இன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.