வீண்போன தலைவர் பிரபாகரனது முயற்சி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வடக்கு, கிழக்கு, மலையைகம் என்ற ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பினை உருவாக்கியிருந்தார்.
ஆனால் தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு இல்லாமல், வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழ் மக்கள் பிரிந்து நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று(20) இடம்பெற்ற மலையகம் 200 நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் ,சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
ஒன்றிணைந்த கட்டமைப்பு

மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்பு நாம் இந்த மண்ணில் சுதந்திரமாக எமது கலாசார அடிப்படையில், மத அடிப்படையில், இன அடிப்படையில், மொழி அடிப்படையில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம்.
ஆனால் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை வழிநடாத்துகின்ற, எம்மை துச்சமாக நினைக்கின்ற அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் எம்மை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு வழிநடாத்துகின்றனர்.
மீண்டும் சுதந்திரத்தை அனுபவிக்க என்ன வழி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வடக்கு, கிழக்கு, மலையைகம் என்ற ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பினை உருவாகியிருந்தார். அத்தோடு மலையகத்தில் பொங்குதமிழ் நிகழ்வொன்று அப்போது மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு, கிழக்கு மற்றும், மலையகத்தில் பொங்கு தமிழ் மேற்கொள்வதனூடாக நாம் மூன்று பகுதிளிலும் ஒரே தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று அன்று பிரபாகரன் அடையாளப்படுத்தினார்.
ஆனால் தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மூன்றுபகுதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு இல்லாமல் , வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழ் மக்கள் பிரிந்து நிற்கின்றனர்.
2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியலிருந்த சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டுமாயின், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்” என்றார்.