தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு! 15 பேர் பலி
தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் தென் பகுதியில் பட்டணி, நாராதிவத், யால ஆகிய நகரங்களில் உள்ள 17 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பெரும்பாலும் சிறிய கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இடம்பெறுள்ளன.
எச்சரித்த சந்தேக நபர்
நேற்று (16) இரவு சந்தேக நபர் ஒருவர் யால, யஹா மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கறுப்பு பை ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளார்.
அத்துடன், மரணிக்க விரும்பவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறுமாறு ஊழியர்களுக்கு எச்சரித்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிய 10 விநாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து நகரங்களில் வன்முறை சம்பவங்கள்
இந்நிலையில், அண்மைக்காலங்களில் மலேசியா எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்து நகரங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
அங்கு நடக்கும் வன்முறைகளை கண்காணித்து வரும் டீப் சவுத் என்ற அணியினர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மோதல்கள் காரணமாக 7,300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, தாய்லாந்தின் தென் பகுதியில் மலாய் இன போராளிகள் குழு தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.