தையிட்டி போராட்ட விவகாரம் -தமிழ்த்தேசிய கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த அங்கஜன்!
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உள்ளிட்டவர்களின் இணைத் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இவர்களுடன் சிறிலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வெளிநடப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்தே இவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
உறுப்பினர்கள் வெளிநடப்பு
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் சிவபாலன் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.
அதன் போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, அதிபர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், சி. சிறீதரன், த. சித்தார்த்தன், மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

