'திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு' அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - கூட்டாக வலியுறுத்து
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான பொதுக் கட்டமைப்பானது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான கலந்துரையாடல் யாழ். நாவலர் மண்டபத்தில் இன்று (17) நடைபெற்றது.
இதில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், தமது அரசியலுக்கு இந்தக் கட்டமைப்பை எவரும் பயன்படுத்தக் கூடாது. இதுவொரு நினைவேந்தல் கட்டமைப்பாக இருக்க வேண்டும்.
இந்த கட்டமைப்புக்குள் அரசியல் புகுந்து கொண்டால், அரசியலுக்காக இந்தக் கட்டமைப்பை எவரேனும் பயன்படுத்த முனைந்தால் இதில் இருந்து நான் உடனடியாக வெளியேறிச்செல்வேன்” என்றார்.
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,
“கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நினைவேந்தலை யார் செய்வது என்ற பிரச்சினை ஏற்படவில்லை. அதன் பின்னர் தான் நினைவேந்தல் நிகழ்வுகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு காரணம் யார் பெயர் எடுப்பது என்பது தான்.
எனவே நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்தப் பொதுக் கட்டமைப்பானது அரசியல் கட்சி சார்ந்ததாகவோ அரசியல்வாதிகள் சார்ந்தோர் இல்லாமல் இருக்க வேண்டும்.
மாவீரர்களின் பெற்றோர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகளை முன்னுறுத்தி பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவோம். பின்னணியில் நாம் அவர்களுக்கு உறுதுணையாக, பாதுகாப்பாக இருப்போம்” என்றார்.
வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,
“இந்தப் பொதுக் கட்டமைப்பு முழுமையான பொதுக்கட்டமைப்பாக உருவாக வேண்டும் ஆயின், வடக்கு கிழக்கின் பிரதிநிதிகளை உள்ளடக்கி இக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
நினைவேந்தல் நிகழ்வுகளில் தங்களை முன்னிலைப்படுத்தவில்லை என எவரும் விலகி இருக்க முடியாது” என்றார்.