ஆளுநர் நியமனத்தில் மொட்டுவின் ஆதிக்கம் -அம்பலமான தகவல்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பதவிக்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன மூன்று பெயர்களை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக தற்போதுள்ள பல ஆளுநர்களை மாற்ற வேண்டாம் எனவும் அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
சிறி லங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் வடமேல் மாகாண ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் ஒருவர் என பேச்சாளர் குறிப்பிட்டார்.
சாதகமாக பதில் அளித்த ரணில்
பல ஆளுநர் பதவிகளை மாற்ற வேண்டாம் என அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அதிபர் சாதகமாக பதிலளித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 17ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
