விசேட விமானத்தில் இலங்கை விரையும் உயர்மட்ட குழு - 3 மணிநேரத்தில் மீண்டும் புறப்பாடு
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு இலங்கை விஜயம்
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் நிலைகளை மதிப்பிடுவதற்காக, பிரதம பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதுடன் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள்...
இவர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொடா சந்தித்து பேச்சு நடத்தியதன் விளைவாகவே குறித்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தியா தற்போது இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.