திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.
மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளங்களோடு மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
இதன்போது மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் பெற்றோர் கௌரவிப்பில் மாவீரர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதுக்குடியிருப்பு
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் ஒன்று இன்று (22) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த மாவீரர் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பார்வையிட்டு அஞ்சலி
மூன்று மாவீரர்களின் தாயார் ஒருவர் நாடாவினை வெட்டி திறந்துவைத்துள்ளதை தொடர்ந்து மாவீரர்களின் பொது கல்லறைக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு உறவினர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தி.கிந்துஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஊடகபேச்சாளர் க.சுகாஸ் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அ.சுயாத்தன் பிரசாத்,புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கதலைவர் நவநீதன் உள்ளிட்டவர்களும் மாவீரர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
குறித்த மாவீரர் மண்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மாவீரர்கள் 529 பேரின் விபரங்கள் அடங்கிய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த மண்டபம் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்துள்ளார்கள். இதன்போது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு பழமரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





