ஈரான் போரில் பெருத்த ஏமாற்றம்! நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா
ஈரான் உடனான போரில் நேட்டோ (NATO) நட்பு நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தால், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், ஈரான் மீதான போர் நடவடிக்கையை நேட்டோ கூட்டணிக்கான ஒரு "சோதனை" என்று விவரித்துள்ளார்.
அதன்படி, நேட்டோ நாடுகள் இந்தச் சோதனையில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் கடந்த ஆறு வார காலப் போரில், அமெரிக்க மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக நிதி உதவி செய்தும், நேட்டோ நாடுகள் அமெரிக்காவைப் புறக்கணித்தது மிகவும் வருத்தத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் நிபந்தனை
ஈரான் போரில் பாதுகாப்பு ரீதியான சில உதவிகளைத் தவிர, நேரடி இராணுவப் படைகளை அனுப்ப ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன.

ஸ்பெயின் போன்ற நாடுகள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தங்களின் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது ட்ரம்பின் கோபத்தை அதிகரித்துள்ளது.
நேட்டோ நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிட வேண்டும் என்ற ட்ரம்பின் நிபந்தனையைச் சில நாடுகள் ஏற்கத் தயங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆபத்தில் சர்வதேச பாதுகாப்பு
இந்த நிலையில், இதற்குத் பதிலாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மூடுவது அல்லது அங்கிருக்கும் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.
[1J5789 ]
Image Credit: PBS
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ட்ரம்பைச் சந்தித்துப் பேசியபோது, நட்பு நாடுகள் தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியாக உதவியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் மிக முக்கியமான தூணாகக் கருதப்படும் அமெரிக்கா, அதிலிருந்து வெளியேறினால் அது சர்வதேச பாதுகாப்புச் சூழலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |