அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம் - விஜய் கூட்டத்தால் அதிர்ந்த திருச்சி
புதிய இணைப்பு
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு என தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலத்தில் போருக்கு போகும் முன்பு, போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு தான் போருக்கு போவார்கள்.
தொலைக்காட்சி நேரலை
அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்க போகும் ஜனநாயக போருக்கு தயாராகும் முன்பு நம் மக்களை உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என்று வந்து இருக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். அதற்கு நிறைய உதாரணங்களாக 1956ம் ஆண்டு அண்ணாதுரை முதலில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்த இடம் திருச்சி தான்.
அதற்கு பிறகு, 1974ம் எம்ஜிஆர் முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான் என தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒலிவாங்கி வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை.
இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழக அரசியல் களத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ள த.வெ.க. தலைவர் விஜய் (tvk leader vijay) திருச்சியிலிருந்து தனது பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.
மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று (13.09.2025) தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரச்சாரத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
அந்தவகையில், முற்பகல் 10.35க்கு திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் த.வெ.க. தலைவர் விஜய் டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
