இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக பிரித்தானியா புதுப்பித்துள்ள ஆலோசனைகள்
இலங்கைக்கு வருகைதரும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளைப் பிரித்தானியா புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவுக் கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறும் பிரித்தானிய அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கோரியுள்ளது.
பயணக் காப்பீட்டைப் பெறுவதும், அது போதுமான காப்பீட்டை வழங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளது.
பலவீனமான நிலைமைகள்
இலங்கையின் பொருளாதார நிலை பலவீனமாகவே உள்ளது, நிலைமைகள் மோசமடைந்தால், சில தயாரிப்புகள் உதாரணமாக மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் குறைவாகக் கிடைக்கக்கூடும். மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கிடைப்பது, போக்குவரத்து, வணிகம் மற்றும் வணிகச் சேவைகளைப் பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சனநெரிசல் மிகுந்த இடங்களை தவிர்க்குமாறும், இந்தப் பயண ஆலோசனை மற்றும் உள்ளுர் ஊடகங்கள் மூலம் முன்னேற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டவர்கள் பார்வையிடும் இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம். நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில் உதவி தேவைப்படுமானால், நாட்டின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான தமது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.