மகாராணியின் இறுதிச்சடங்கு தொடர்பிலும் ரஷ்யா அமெரிக்கா இரு துருவங்களாக!
பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
96 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள பைடன்
மேலும், தாம் இதுவரை சார்லஸ் மன்னரை தொடர்பு கொள்ளவில்லை எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க இருப்பதாக ஜோ பைடன் வெளிப்படையாக கூறியுள்ளது போன்று இதுவரை எந்த உலகத் தலைவர்களும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தி மட்டும் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஷ்யர்கள் மனதில் ஒருபோதும் இரண்டாம் எலிசபெத் மகாராணி இடம்பெறவில்லை என ரஷ்யாவின் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ள நிலையில், விளாடிமிர் புடின் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மேக்ரானின் ஆழ்ந்த இரங்கல்
அதேவேளை, தமக்கு வாய்ப்பு அமையும் என்றால் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தாம் விரும்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உறுதியாக பங்கேற்பார் என நம்பப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகாராணியின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தையும் வெறுமையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.