ட்ரோன்கள் மூலம் தாண்டவமாடும் உக்ரைன் : விமான நிலையங்களை மூடியது ரஷ்யா
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நோக்கி சுமார் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் இராணுவம் நேற்று(21) பாரிய தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.
தாக்குதல்களைத் தொடர்ந்து மொஸ்கோவின் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
அதிகாலைவேளை தாக்குதல்
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில், ஆளில்லா விமானங்கள் தலைநகரை நோக்கி வருவதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவிக்கத் தொடங்கினார். காலை 10 மணிக்குள், நகரைச் சுற்றி மொத்தம் 80 உக்ரைனிய ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக அவர் கூறினார்.

தலைநகர் மொஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு கணிசமான அளவு எரிபொருளை வழங்கும் மொஸ்கோவிலுள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் குறிவைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
301 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
ஞாயிற்றுக்கிழமை இரவுக்கும் திங்கள்கிழமை காலைக்கும் இடையில் ரஷ்யா முழுவதும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் 301 உக்ரைனிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் திங்களன்று, உக்ரைன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கப்பல் தீப்பிடித்ததாகவும், இதில் ஒரு மாலுமி உயிரிழந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கி மற்றும் இந்தியக் குடிமக்கள் உட்பட எட்டு மாலுமிகள், உயிர் காக்கும் மிதவை மூலம் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், அந்தக் கப்பல் "கணிசமான சேதத்தைச் சந்தித்து, கடலில் பயணிக்கும் தகுதியை இழந்தது" என்றும் உக்ரைனின் துணைப் பிரதமர் ஒலெக்சி குலேபா கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |