உக்ரைன் போர் பதற்றம் அதிகரிப்பு -அணு ஆயுத பயிற்சியை தொடங்கியது ரஷ்யா
உக்ரைனில் எட்டு மாத காலப் போர் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதை விளாடிமிர் புடின் பார்வையிட்டார்.
ரஷ்ய இராணுவத்தினர் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் நாட்டின் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஆர்க்டிக்கிலிருந்து ரஷ்யாவின் தூர கிழக்கு நோக்கி ஏவியதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM), ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்டது மற்றும் Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் பயிற்சி இலக்குகளை நோக்கி செலுத்தின. இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது அலுவலகத்தில் இருந்து காணொளி இணைப்பு மூலம் மேற்பார்வையிட்டார்.
இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்த கருத்தில், அதிபர் புடின் இந்த பயிற்சியை மேற்பார்வையிட்டார், மேலும் எதிரிகளின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலடியாக ஒரு பெரிய அணுசக்தி தாக்குதலை வழங்குவதற்கான பயிற்சியை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அணு ஆயுதப் பயிற்சி
இந்த அணு ஆயுதப் பயிற்சியானது, ரஷ்யாவின் பிரதேசத்தின் மீதான தாக்குதல்களை தடுக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக புடின் எச்சரித்ததை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
