இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா
ஆசியாவில் ஈரானிய கச்சா எண்ணெயைக் கடத்தியதற்காக முன்னர் தடை செய்யப்பட்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அமெரிக்கப் படைகள் “பார்வையிடுவதற்கான உரிமையின் பேரில் கடல்வழித் தடையை மேற்கொண்டதாகவும்” மற்றும் “எந்தவித அசம்பாவிதமும் இன்றி” M/T Tifani கப்பலில் ஏறியதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், தெஹ்ரானுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலையும் அல்லது அதன் அரசாங்கத்திற்கு உதவக்கூடிய ஆயுதங்கள், எண்ணெய், உலோகங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களையும் தடுப்பதற்கான சமீபத்திய நடவடிக்கை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்கனவே பலவீனமாக உள்ள போர் நிறுத்தம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரும், இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் வேளையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, M/T Tifani கப்பல் செவ்வாயன்று இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் எண்ணெயை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அது போட்ஸ்வானா(Botswana) கொடியிடப்பட்ட கப்பலாக இருந்தபோதிலும், பென்டகன் M/T Tifani "நாடற்றது" என்று விவரித்துள்ளது.
செவ்வாயன்று கப்பல் எங்கு, எந்த நேரத்தில் கைப்பற்றப்பட்டது என்பதை அந்த அறிவிப்பில் துல்லியமாகக் குறிப்பிடவில்லை.
"நாங்கள் தெளிவுபடுத்தியபடி, சட்டவிரோத வலையமைப்புகளைச் சீர்குலைக்கவும், ஈரானுக்குப் பொருள்சார் ஆதரவை வழங்கும் தடைசெய்யப்பட்ட கப்பல்கள் எங்கு செயல்பட்டாலும் அவற்றை இடைமறிக்கவும் உலகளாவிய கடல்சார் நடைமுறை முயற்சிகளை நாங்கள் தொடர்வோம்," என்று பென்டகன் அறிவித்துள்ளது.
இது ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளின் முந்தைய அறிக்கைகளை எதிரொலித்துள்ளது.