பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச
இறுதிக்கட்டப் போரின் போது தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்களை அமெரிக்கா உயிருடன் கோரி இருந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களை மீட்பதற்காக அமெரிக்க (USA) கப்பலொன்று கூட அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு (Colombo) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இனவழிப்பு வாரம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “புலம்பெயர்ந்தவர்களுடன் இந்த அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கின்றது. தேர்தல் தொடர்பில் அவர்களுடன் கொடுக்கல், வாங்கல்கள் கூட இருந்திருக்கலாம்.
நிதி உதவி கூட கிடைக்க பெற்றிருக்கும். கனடாவில் இனவழிப்பு நினைவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கூட வெளியிடப்படவில்லை.
இனவழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மற்றும் கொழும்பில் கூட இன வழிப்பு நினைவு கூரப்படுகின்றது.
ஆனால் ஆட்சியாளர்கள் போர் வீரர்களுக்குரிய கௌரவத்தை வழங்கவில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு மனம் வலிக்கும் என்பதால் தான் போர் வீரர்களை கூட சிப்பாயென ஆட்சியாளர்கள் விளித்துள்ளனர்.
உயிருடன் தம்மிடம் ஒப்படைக்குமாறு
போர்க்காலத்தில் கூட சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. அது இன்னும் தொடர்கின்றது.
இறுதிக்கட்டப் போரின் போது வடக்கு கடற்பரப்புக்கு அண்மித்து அமெரிக்காவின் மரைன் படையணியின் கப்பலொன்று வந்தது. சர்வதேச கடற்பரப்பில் அது நிறுத்தப்பட்டிருந்தது.
பொட்டு அம்மான், பிரபாகரன் உள்ளிட்டவர்களை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரினார்கள். எதற்காக இது? இலங்கையை பிரிக்க வேண்டும் என்பதே அந்த சக்திகளின் நோக்கம். அந்த தேவைக்காகவே புலிகள் அமைப்பு செயற்பட்டது. சர்வதேச ரீதியிலும் வலுவடைந்தது“ என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
