வவுனியா மாநகரசபை தெரிவில் புறந்தள்ளப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனி
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கட்சிகளுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதும் வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை புறந்தள்ளி நகர்வுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வவுனியா வடக்கில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
அங்கு தமிழரசுக் கட்சி ஐந்து ஆசனங்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி நான்கு ஆசனங்களையும், ஜனநாய தமிழ் தேசிய கூட்டணி மூன்று ஆசனங்களையும் கொண்டுள்ளன.
கட்சிகளுக்கு ஆதரவு
ஏனைய சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இருப்பினும், மாவட்டத்தில் ஆட்சி அமைப்பது தொர்பாக ஏனைய கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வவுனியா மாவட்ட மட்டத்தில் பேசி வருகின்ற போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் மாவட்ட மட்டத்தில் எந்தவொரு பேச்சுக்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாநகர சபை
வவுனியா மாநகர சபையில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஆதரவு அவசியமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் எந்தவொரு பேச்சுக்களும் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
மாறாக ஏனைய கட்சிகளை அழைத்து மாவட்ட மட்ட கூட்டங்களை தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு கூட்டணி பேசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
