ஆதிலிங்கம் உடைப்பு - ஆரம்பமாகிய பாரிய மக்கள் எதிர்ப்பு போராட்டம்..!
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமைக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணியானது வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடையவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலய அழிப்பு
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் தெய்வச்சிலைகளும் அடையாளந்தெரியாதவர்களென வழமை போன்று கூறப்படும் இன அழிப்பாளர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளமை (26.03.2023) அன்று தெரியவந்தது.
தமிழர் தாயகத்தில் தமிழ், அல்லது அவர்களது அடையாளங்களுள் ஒன்றான சைவ அடையாளங்கள் நிராகரிக்கப்பட்டு பௌத்த அடையாளத்திற்குரியது என ஆக்கிரமிக்கப்படுவதும் அவை சிங்கள பௌத்தர்களின் அடையாளம், அவர்களின் வரலாற்று வாழிடம் என்ற புனைவை உருவாக்கும் இலங்கையின் பௌத்த மதத்திற்குரிய வகையில் வரலாற்றுத் திருத்தல்களைக் காலங்காலமாகச் செய்து வரும் தொல்லியல் திணைக்களத்தால் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ள பல நூறு தமிழ் தொன்மை மரபு அடையாளச் சின்னங்கள் நிறைந்த இடங்களில் வெடுக்குநாறி மலையும் ஒன்று.
வெடுக்குநாறி மலையை இலங்கையின் தொல்லியல் திணைக்களம் வழமை போன்று வரலாற்றுப் புரட்டுகளாலும், படை வலிமையாலும் நீதித்துறை மற்றும் தொல்லியல் துறையின் ஆதரவுடனும் ஆலய பரிபாலன சபையினரை வெளியேற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் இந்த அநியாயம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்புக்கு எதிராக குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து முன்னெடுத்துள்ளனர்.