நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் : சபையில் சஜித் சீற்றம்
நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பிற தவறான செயல்கள் குறித்து ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு செய்திகளைப் பார்க்கிறோம்.
நாளாந்த பத்திரிகை
சமீபத்திய சம்பவங்களாக அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தையும், கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தையும் குறிப்பிடலாம்.
இதற்கு மேலதிகமாக நாளாந்த பத்திரிகைகளை வாசிக்கும் போது வேறு பல சம்பவங்களையும் காணலாம்.
தேவையான நடவடிக்கை
இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது, சம்பிரதாய முறைகளைப் பின்பற்றி நடந்து கொள்வதற்குப் பதிலாக உடனடியாக செயல்பட்டு தகாத முறைக்குட்படுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான பொறிமுறையை தாபிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.
இந்தக் கடமையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது கொள்கை வகுப்பாளர்களாகிய நமது பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
