கொழும்பு துறைமுக நகர வன்முறை மோதல்! கொலைச் சம்பவ விசாரணையில் அம்பலமாகும் இணைய மோசடி சர்ச்சை
கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாரிய குற்றவியல் விசாரணையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதலின் போது கடத்தப்பட்டு பின்னர் எஹெலியகோடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை, கணினி மற்றும் இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, சம்பவத்தில் தொடர்புடைய சீன பிரஜைகள் இலங்கையில் எந்தவொரு சட்டபூர்வமான தொழிலிலும் ஈடுபடவில்லை என்பதும், அவர்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னரே நாட்டிற்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி
குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சீன சந்தேக நபர்களிடம் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படும் குறித்த இரு சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணைகளின் படி, கடந்த வியாழக்கிழமை (23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரில் இரண்டு சீன குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. காவல்துறை தகவல்களின் படி, சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு சுமார் 11 மணியளவில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுக நகரில் உள்ள தொங்கு பாலம் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது அதிகாலை 2 மணியளவில் சுமார் 20 சீன பிரஜைகள் அடங்கிய மற்றொரு குழு அங்கு வந்து, குறித்த மூவரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்கியதுடன், கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களில் இருவர் பின்னர் துறைமுக நகருக்குள் உள்ள ஒரு வாகனத்தில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.
சடலத்தை மறைக்கும் முயற்சி
மூன்றாவது நபர் வேறு இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மணிநேரங்களின் பின்னர், கடத்தப்பட்ட சீன பிரஜையின் சடலம் எஹெலியகோடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், கைகள், கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சடலத்தை மறைக்கும் முயற்சியாக அதன் மீது கற்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று எஹெலியகோடா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றச் செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு சொகுசு ஜீப் வாகனமும் பண்டாரகம, பஹல போப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை தற்போது கொழும்பு குற்றப் பிரிவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விசாரணை தொடர்பான அறிக்கை
விசாரணை தொடர்பான அறிக்கை காவல்துறை மா அதிபருக்கும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் இலங்கையில் இடம்பெற்றுவரும் இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடி சம்பவங்களின் பின்னணியில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மோசடி மையங்கள், சீன பிரஜைகளால் ஒருங்கிணைக்கப்பட்டதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
சர்வதேச ரீதியில் செயற்படும் சீன ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடைய இணையவழி மோசடி நடவடிக்கைகள் பல நாடுகளில் இடம்பெற்று வருவதாகவும் விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கியதாக கூறப்படும் சில குற்றக் குழுக்கள், முதலீட்டு மற்றும் காதல் மோசடிகளை உள்ளடக்கிய இணைய மோசடி முறையை பயன்படுத்தியதாக சர்வதேச விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேபோன்ற மோசடி நடவடிக்கைகள் இலங்கையிலும் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சீன டிரையாட்ஸ் என அழைக்கப்படும் நாடுகடந்த குற்ற வலையமைப்புகளும் இதுபோன்ற இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றமை, சம்பவத்தின் திட்டமிடப்பட்ட தன்மை மற்றும் சர்வதேச இணைய குற்றச் செயல்களுடன் காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவை, இலங்கை சர்வதேச குற்ற வலையமைப்புகளின் புதிய செயற்பாட்டு தளமாக மாறுகின்றதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |