யாழ். அச்சுவேலியில் வன்முறைக்குழு அட்டகாசம்
யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலியில் இனந்தெரியாத குழுவொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் இன்று (10) அதிகாலை 6.15 மணியளவில் குறித்த நபர் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக சென்ற வேளை நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் இன்று காலை தனது கடைக்குச் சென்று கொண்டிருந்த போது குறித்த வீதியில் இனந்தெரியாத குழுவினர் கார் ஒன்றில் காத்திருந்தனர்.
கடுமையான தாக்குதல்
இதன்போது குறித்த குழுவினர் கடை உரிமையாளரை இடைவழியில் மறித்து தலை, கை என்பவற்றில் பொல்லுகளால் கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் 54 வயதுடையவரே இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
