சிறுநீரகத்தை விற்ற பெண் போராளி… மரணமும் வறுமையுமாகத் தொடர்கிற வாழ்வு…
ஈழத்தில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும் உரிமைக்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் இன்று தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் இன்னமும் சமராடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் கடனை அடைக்கத் தன்னுடைய சிறுநீரகத்தை விற்கத் தீர்மானித்த முன்னாள் பெண் போராளியின் சம்பவம், மேற்குறித்த துயர நிலையை வெளிப்படுத்துகிறது.
இது வெளியில் தெரிந்திருக்கும் ஒரு கதை.
ஆனால் நிறைய முன்னாள் போராளிகள் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மீன்விற்கும் போராளி
இப் பதிவை எழுதுகின்ற நாளில் சில என் சிங்கள வாசகர்கள் சிலர் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். இவர்களை அழைத்துக்கொண்டு சில முன்னாள் போராளிகளிடத்திலும் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகளின் தாய்மார்களிடத்திலும் அழைத்துச் சென்றேன்.
சிறுநீரகத்தை விற்ற முன்னாள் போராளியின் கதையைக் கேட்டு சிங்கள நண்பர்கள் அதிர்ந்து போயினர். அத்துடன் எனது மாணவனின் தந்தையான ஒரு முன்னாள் போராளி மீன் விற்றுக்கொண்டு வரும்போது அவரை அறிமுகப்படுத்தினேன்.
உண்மையான கதாநாயகர்கள் இவர்கள்தான் என்று சிங்கள நண்பர்கள் கூறினர்.
அத்துடன் அவர்களின் இன்றைய போராட்ட நிலையை நேரடியாகவும் பார்த்தனர். இனப்படுகொலைப் போர் முடிவடைந்தது 2009ஆம் ஆண்டில். அப்போது ஆயுதம் ஏந்திய பல ஆயிரக்கணக்கான போராளிகள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
போருக்குப் பிறகு புதிய வாழ்க்கையை உருவாக்குவது மிகவும் போராட்டமானதாக மாறியது.
கல்வி இடைநிறுத்தம், தொழில் வாய்ப்பு இன்மை, சமூக சந்தேகம், அரச படைகளின் கண்காணிப்பு, குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சுமை என்று பல்வெறு பக்கங்களாலும் முன்னாள் போராளிகள் சிக்கலை எதிர்கொண்டனர்.
காவலாளியாக போராளி
அண்மையில் ஒரு போராளி அண்ணா (கிளிநொச்சியில் பிரபலமான உணவகம் ஒன்றில் காவலாளியாக பணிசெய்து வருகிறார்.) தொலைபேசியில் அழைத்தார்.
தமிழீழ காவல்துறை உறுப்பினராக இருந்த அவரது மனைவிக்கு இதய நோய். பொருளை அடகு வைத்து பணத்துடன் கொழும்புக்கு சிகிச்சைக்காக பேருந்தில் பயணத்திற்குக் கொண்டிருந்த வேளையில் ஓமந்தை தாண்டியதும் அவரது மனைவி நெஞ்சடைத்து மயங்கி விழுந்துள்ளார்.
வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவேளையில் அவர் உயிர் பிரிந்தது தெரிய வந்தது. இப்படித்தான் ஒரு புறம் பொருளாதார நெருக்கடி மறுபுறம் கடுமையான நோய்கள் என முன்னாள் போராளிகளின் சமர்க்களம் இன்று நீள்கிறது.
பெண் போராளிகளின் நிலை அதைவிடவும் சிக்கலானது.
போரின்போது அவர்கள் பல முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், போருக்குப் பிறகு சமூகத்தில் அவர்களுக்கு ஏற்ற இடம் கிடைக்கவில்லை.
பலர் வேலை வாய்ப்புகளைப் பெற முடியாமல் திணறுகின்றனர். சிலர் திருமணம், குடும்ப வாழ்க்கை, சமூக ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றிலும் தடைகளை சந்திக்கின்றனர்.
இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார்கள். கடன் வாங்கி வாழ வேண்டிய நிலை உருவாகிறது. அந்தக் கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலையில், உடலையே ஒரு பொருளாக மாற்றும் நிலைக்கு தள்ளப்படுவதெல்லாம் எவ்வளவு கொடுமையானது?
போரின் முடிவென்பது
இக் கதைகள், போரின் முடிவு என்பது வெறும் ஆயுதங்கள் மௌனிப்பதுடன் நின்றுவிடுவதில்லை என்பதை நினைவூட்டுகின்றன. உண்மையான சமாதானம் என்பது மனிதர்களின் வாழ்க்கை மீள்கட்டமைக்கப்படும்போது தான் உருவாகும்.
முன்னாள் போராளிகளுக்கு தொழில் பயிற்சி, கல்வி வாய்ப்புகள், மனநல ஆதரவு, சமூக இணைப்பு போன்றவற்றை வழங்கும் நீடித்த திட்டங்கள் மிகவும் அவசியமாகின்றன.
சில அரசாங்க மற்றும் அரசு அல்லாத அமைப்புகள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை அனைவர் வாழ்க்கையையும் நிலைநிறுத்தும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், போருக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றம் மெல்ல நகர்வதும் ஒரு காரணமாகும்.
வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பது, சிறிய தொழில்கள் வளர முடியாத நிலை, கடன் சுமைகள் அதிகரித்தல் ஆகியவை முன்னாள் போராளிகளை மேலும் துன்புறுத்துகின்றன.
குறிப்பாக பெண்கள், தனியாக குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் இருந்தால், இந்தப் பிரச்சினைகள் இன்னும் கடுமையாக மாறுகின்றன.
மர்ம மரணங்கள்
போருக்குப் பிறகு முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் இன்னொரு அதிர்ச்சியான விசயம் போராளிகளின் மர்மமான மரணங்கள். பல ஆண்டுகளாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சில முன்னாள் போராளிகள் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் சலசலப்பின்றி இடம்பெற்று வருகின்றன.
சில தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதனையும் வெறும் தற்கொலைகளாக மாத்திரம் கருதிவிட இயலாது.
தொடர்ந்து இடம்பெறும் இந்த மரணங்கள் குறித்து எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. போருக்குப் பிறகு முன்னாள் போராளிகள் பல்வேறு மன அழுத்தங்களிலும் சமூக அழுத்தங்களிலும் வாழ்ந்தனர்.
தொடர்ந்து கண்காணிப்பு உணர்வு, வேலை இல்லாமை, கடன் சுமை, சமூக ஒதுக்கல் ஆகியவை அவர்களின் மனநிலையை பாதித்துள்ளன. இத்தகைய சூழலில் நிகழும் மரணங்கள் இயல்பானவையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பதை தெளிவுபடுத்தாத நிலை குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்குகிறது.
தமிழினியின் மரணம்
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி புற்றுநோயால் இறந்தார். அவரது மரணச் சடங்களில் கலந்துகொண்டு அதேநாளில் இன்னொரு பெண் போராளி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
பேருந்தில் காத்திருந்த போராளி திடீரென நின்ற இடத்திலேயே இறந்தார் என்ற செய்தியையும் அறிந்தோம். இன்று முன்னாள் போராளிகள் நலன்புரிக் காப்பகத்தின் முகநூலில் அடிக்கடி இறக்கும் முன்னாள் போராளிகள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.
தமிழினி அவர்கள் மரணித்த நாட்களில் நூற்றுக்கணக்காக இருந்த மரணங்கள் இன்று பல நூறுகளை கடந்து நீள்கின்றன. இன்று நாம் சந்தித்த வேளையிலும் தமிழினி அவர்களை இழந்த நிலையில் அவரது தாயார் கண்ணீருடன் பேசினார்.
புனர்வாழ்வு முகாம் என அரசால் அழைக்கப்பட்ட தடுப்பு முகாங்களில் இருந்த வெளியே வந்த பின்னர், தமது உடலில் நிறைய மாற்றங்களை உணர்வாதாகவும் உடல் வலுவிழந்து பாரங்களை தூக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் நோயாளியாக மாறிவிட்டதாகவும் முன்னாள் போராளிகள் இலங்கை அரசின் ஆணைக்குழுக்களின் முன்பாகவே சொல்லியுள்ளனர்.
உணவில் விசம் அல்லது தமக்கு ஏற்ப்பட்ட ஊசிகளில் விசம் கலந்திருக்கலாம் என்றும் அஞ்சுகிறார்கள். உடலுக்குள்ளும் போராட்டம், உடலுக்கு வெளியிலும் போராட்டம். மனத்திற்குள்ளும் போராட்டம்.
எங்கள் விடுதலைக்காகப் போராடி இன்று எம்மில் பலர் கௌரவத்துடன் வாழப் பல பணிகளை கடந்த காலத்தில் செய்த போராளிகளின் வாழ்வு இன்றும் மரணமும் வறுமையும் என்று பெரும் சமர்க்களமாகவே நீள்கின்றது. இதனைத் தடுத்த நாம் அனைவரும் தொடர்ந்தும் விரைந்தும் செயலாற்ற வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 February, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.