கட்டுநாயக்காவில் கொலையாளி தப்ப உதவிய இரண்டு பிக்குகள் சிக்கினர்
இலங்கையில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் காவலில் இருந்த நபரொருவரை தப்பிச் செல்ல உதவிய இரண்டு பிக்குகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதியாக செயற்பட்ட இரண்டு பிக்குகளும் மற்றுமொரு நபரும் ஹெட்டிபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதம பிக்கு உட்பட மூவர் கைது

ஹெட்டிபொல ரிட்டதெனிய ஸ்ரீ ஜய லங்காராம விகாரையின் பிரதமகுருவான 40 வயதுடைய பொத்தேவல இந்திரசர, 38 வயதுடைய திவுல்வெவ தீபாநந்த என்ற துறவி மற்றும் அம்பேவலயன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான கம்புருகமுவ வீரசிங்க ஆராச்சிலகே திலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேடப்படும் சந்தேக நபரை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றியதோடு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேகநபரிடம் இருந்து இரண்டு பைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்

2022 டிசம்பரில் ஹன்வெல்ல பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளரை சுட்டுக் கொன்றதற்காக சந்தேக நபர் தேடப்பட்டு வந்தார். சந்தேக நபரை அடையாளம் கண்டுகொண்ட காவல்துறையினர் நீதிமன்றில் பயணத்தடை பெற்று, இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தனர்.
எனினும், சந்தேகநபர் போலி அடையாளத்தின் கீழ் டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றார் மற்றும் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டார், இதன் போது இரண்டு பௌத்த பிக்குகள் அவரை விடுவித்து தப்பிக்க உதவியுள்ளனர்.