சிறிலங்காவிலிருந்து கோட்டாபய தப்பியோட முன்னர் அதிபர் மாளிகைக்குள் நடந்தது என்ன...! இறுதி நிமிடத்தில் மாற்றப்பட்ட திட்டங்கள்
சிறிலங்காவின் பிரமாண்ட நாயகனாக வர்ணிக்கப்பட்ட அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது அத்தனை திட்டங்களையும் தலைகீழாக்கி, நிர்வகிக்க முடியாமல் கைவிட்டு பரிதாபமாக தப்பியோடும் நிலைக்குள் தள்ளப்பட்டது இந்த நாட்டின் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.
மிஸ்டர் க்ளீன் என்று வர்ணிக்கப்பட்ட கோட்டாபய, தப்பியோடுவதற்கு முன்னர் உண்மையில், அதிபர் மாளிகைக்குள் நடந்தது என்ன? கடந்த ஒன்பதாம் திகதி கொழும்பில் போராட்டக்காரர்கள் ஆக்ரோசம் கொண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிடும் வரைக்கும் கோட்டாபய எங்கே இருந்தார்? யாரை சந்தித்தார்.... கலந்துரையாடப்பட்டது என்ன. இறுதியில் மாளிகையை விட்டு வெளியேறும் முடிவு எப்படி எடுக்கப்பட்டது..
ஏற்படவிருந்த இரத்தக்களரி எப்படி தடுக்கப்பட்டது போன்ற பல உள்ளக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 9 ஆம் திகதியன்று தலைநகரில் ஓர் பாரிய மக்கள் புரட்சி ஒன்று வெடித்திருந்தது. திக்கெட்டும் இருந்து மக்கள் அலையென திரண்டு கொழும்பு நோக்கி படையெடுத்தனர். அதிபர் மாளிகை உட்பட அரசின் அனைத்து உயர் வாசஸ்தலங்களிலும் பாதுகாப்பு பன்மடங்காக பலப்படுத்தப்பட்டது.
அதிபர் மாளிகையில் கோட்டாபய
அந்நாளில் கோட்டாபய அதிபர் மாளிகையிலேயே இருந்துள்ளார். அங்கு தான் அவர் தனது காலை உணவையும் உட்கொண்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரும் அங்கிருந்தனர்.
மக்களின் போராட்ட நிலைமைகள் தொடர்பில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச படையதிகாரிகளுடன் விவாதித்தார். கண்ணீர் புகை மற்றும் நீர் தாரையைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க கோட்டாபய விரும்பினார். எனினும், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர், இரத்தக்களரி மற்றும் அதன் விளைவாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை.
கோட்டாபய தந்திரோபாயமாக மாளிகையை விட்டு வெளியேறி நிலைமையை சமாளிப்பதற்கு அனுமதிப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர்கள் கருதினர்.
அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய
அப்போது, போராட்டக்காரர்கள் வீதி தடைகளை உடைத்து அதிபர் மாளிகை நோக்கி வந்து கொண்டிருப்பதாக மாளிகைக்கு செய்தி வந்தது. இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்புத் தலைவர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, விரைவாக வெளியேறவும், இதனால் இரத்தக்களரியைத் தடுக்கவும் இணங்கினார். பைகள் அவசரமாக பொதி செய்யப்பட்டன.
அவரும் மனைவி அயோமாவும் கடற்படைத் தலைமை வைஸ் அட்மிரல் உலுகெதென்னாவின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு சிங்களப் போர்வீரரின் பெயரிடப்பட்ட (இலங்கை கடற்படைக் கப்பல்) கஜபாகு நிறுத்தப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கடல் ரோந்து கப்பலாகும். இது, இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டதாகும். இதில் ஹெலிகொப்டரை தரையிறக்கும் வசதி கொண்டது.
இந்த கடற்படை கப்பலில் கோட்டாபயவும் மனைவியும் ஏற்றப்பட்ட பின்னர் அந்த கப்பல் திருகோணமலைக்கு சென்றதா? அல்லது கடற்பரப்பிலேயே அங்கு நங்கூரமிட்டிருந்ததா? என்பது இதுவரை வெளியாகாத தகவலாக உள்ளது.
இந்த காலக்கட்டத்திலேயே கோட்டாபய, சபாநாயகர் மகிந்த அபேவர்த்தனவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது பதவி விலகலையும் அறிவித்திருந்தார்.
ஜூன் 9 ஆம் திகதி அதிபர் மாளிகையில் இருந்து பின்வாங்கிய கோட்டாபய எங்கு தலைமறைவாக இருந்தார் எனும் கேள்வி இதுவரை விடை கிடைக்காத ஒன்றாக இருக்கின்றது.
விமானத்தில் ஏற்ற மறுத்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
இந்நிலையில், ஜூலை 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு அவர் புறப்படவிருக்கும் செய்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் விமானிகளுக்கு எட்டியது. இதன்போது கோட்டாபயவையும் அவரது பரிவாரங்களையும் தங்கள் விமானத்தில் ஏற்றிச் செல்ல அந்த இரண்டு தரப்பினரும் மறுத்துவிட்டனர்.
இதன்போது அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் ஜனாதிபதியின் நண்பரான அருண பெர்னாண்டோ ஆகியோர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகேவிடம் உதவி கோரினர். பெர்னாண்டோ, கோட்டாபய ராஜபக்சவின் வியத் மக (தொழில் வல்லுனர்களின் அமைப்பு) உறுப்பினர் ஆவார் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் கொழும்பு வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
இந்தநிலையில், அவர் முயற்சி செய்து பார்த்துவிட்டு விமானிகளையோ அல்லது ஊழியர்களையோ வற்புறுத்த முடியாது என கைவிரித்து விட்டார். இதனால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பறக்க முடியாத நிலை கோட்டாவின் குழுவினருக்கு ஏற்பட்டது. அத்துடன் குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்த பயணி ஒருவர், விமானத்தில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து கோட்டாபயவையும் அவரது பரிவாரத்தின் அனைத்து உறுப்பினர்களையும் தாக்குவார்கள் என்று எச்சரித்தார்.
இதன் பின்னர் கோட்டாபயவின் உதவியாளர்கள் எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில், கோட்டாபய மற்றும் அவரது குழுவை முன்பதிவு செய்ய முயன்றனர். குறித்த விமானம் இரவு 9.20 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட இருந்தது.
விமானப்படையின் உதவியை நாடிய கோட்டாபய
இந்நிலையில், இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேற வேண்டும் என்ற காரணத்தால் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் உதவியை நாடினார் கோட்டாபய.
முப்படைகளின் தலைவர் கோட்டாபய என்பதால் அவரின் கோரிக்கைக்கு விமானப்படை தளபதியால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
இதனையடுத்து, 13 ஆம் திகதி அதிகாலை ரஷ்ய தயாரிப்பான Antonov An-32 turboprop எனும் சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் கோட்டாபயவும் அவரது மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பாதுகாவலர்கள் மாலைதீவு புறப்பட்டனர்.
மாலைதீவு பறந்த கோட்டாபய
மாலைதீவு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டாளர்கள் சிறிலங்கா விமானப்படையின் விமானம் தரையிறங்குவதற்கான அனுமதியை முன்னர் மறுத்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பின்னர் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மாலைதீவின் முன்னாள் அதிபரும் தற்போதேய சபாநாயகருமான முகமது நஷீட்டின் தலையீடு இருந்து இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபயவை மாலைதீவிற்கு கொண்டுவருவதற்கு மாலைதீவு அரசாங்கம் எவ்வாறு அனுமதியளித்தது என மாலைதீவு எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியமையடுத்து “இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவு அரசாங்கம், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவியுடன் வேலனி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான போக்குவரத்து பயணத்தை மேற்கொண்ட இலங்கை விமானப்படை விமானத்திற்கு இராஜதந்திர அனுமதி வழங்கியது" என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
மாலைதீவுக்கு கொண்டுவரப்பட்ட கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் பலத்த பாதுகாப்புடன் கிரிபுஷி தீவில் தங்க வைக்கப்பட்டனர். குறித்த தீவில் மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அவர் ஏறுவதற்கு சில மணி நேரங்களுக்கு மட்டுமே இத்தகைய தங்குமிடம் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் மாலேயில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் சிங்கப்பூருக்கு புறப்பட கோட்டாபய திட்டமிட்டிருந்தார். ஆனால் குறித்த விமானம் கொழும்பில் இருந்து வந்திருந்தது. இந்த விமானத்திற்காக தொலைக்காட்சி குழுவினரும் ஊடகங்களும் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
எனினும் இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணமாக கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் எந்த விமானத்திலும் ஏற விரும்பவில்லை என்று கோட்டாபய தனது உதவியாளர்களிடம் தெளிவுபடுத்தினார். இதனையடுத்து குறித்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
துபாயில் ஏற்கனவே வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினர் ஒருவர், சிங்கப்பூர் செல்வதற்கு தனியார் ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்வதாக கோட்டாபயவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்தார் .
இதனால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறாமல், தனியார் விமானம் வரும் வரை கோட்டாபய காத்திருந்தார். உத்தரவாதத்திற்கு மாறாக, அது கிடைக்கவில்லை.
சிங்கப்பூர் பறந்த கோட்டாபய
இதனையடுத்து, அவர் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரே சவுதியா (முன்னர் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் என்று அழைக்கப்பட்டது) விமானத்தில் புறப்பட முடிவு செய்தார். இந்த விமானம் மாலேயில் இருந்து முற்பகல் 11.30 மணிக்கு புறப்பட்டது. ஹஜ் யாத்திரை முடிந்து மாலே மற்றும் சிங்கப்பூரில் இறங்குவதற்காக ஏராளமான யாத்ரீகர்களை அது அழைத்து வந்தது.
இதன்போது,சில காரணங்களால், கோட்டாபய மற்றும் அவரது பரிவாரங்கள் வரவில்லை என்ற தகவல் சாங்கியில் காத்திருந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் பரவியது. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சேனல் நியூஸ் ஏசியா (சிஎன்ஏ) கூட இந்த தகவலை பெற்றிருந்தது.
எனினும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட இரண்டு வாக்கிய அறிக்கையில் கோட்டாபயவின் வருகை உறுதிப்படுத்தப்பட்டது. அதில், "இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச 'தனிப்பட்ட பயணமாக' சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. எனினும் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் எந்த அடைக்கலத்தையும் கேட்கவில்லை, வழங்கப்படவில்லை" என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
பதவி விலகலை அறிவித்த கோட்டாபய
சிங்கப்பூர் சென்றவுடன் கோட்டாபயவின் முதல் பணியாக, சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஷஷிகலா பிரேமவர்தன முன்னிலையில் புதிய பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டது. இது அதன் நம்பகத்தன்மையில் ஒரு ஆரம்ப சிக்கலை உருவாக்கியது.
இதனையடுத்து கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகளின் பின்னர், உயர் ஸ்தானிகர் பிரேமவர்தன தனது ஊழியர்களில் ஒருவர் மூலமாக அசல் கடிதத்துடன் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.
அதன் பின்னரே சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர் மாநாட்டில் கோட்டாபய பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பியதாக அறிவித்தார்.
கோட்டாபயவின் பயணம் எங்கு முடிவடையும்
2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்று அமோக மக்கள் ஆணையுடன் ஆட்சியமைத்த கோட்டாபய இன்று அதே மக்களுக்கு பயந்து இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.
அவரது பயணம் எங்கு முடிவடையும் என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. அவரது பிரச்சினைகள் முற்றிலும் முடிவடையவில்லை.
இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன் கோட்டாபய அமெரிக்கா விசாவை பெறத் தவறிவிட்டார். கோட்டாபயவுக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குடியுரிமையைத் துறந்தவர்களுக்கு அவர்கள் எளிதில் விசாக்களை வழங்குவது வழக்கமும் அல்ல.
கோட்டாபயவின் இந்த ஓட்டம் எங்கு முடிவடைய போகின்றது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. பலர் சவூதி அரேபியா என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் மீதான அவரது விரோதப் போக்கின் காரணமாகவும் கொரோனா தொற்றுநோய்களின் போது முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது அரபு உலகத்தை கோபப்படுத்தியது. இதனால் அவர் சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுவது சாத்தியமற்ற ஒன்று என தென்படுகின்றது.
இவ்வாறாக சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் வெறும் அஸ்தமானமாகிப் போனதாகவும், அவர் தனக்கான இருப்பிடத்தை தெரிவு செய்வதில் கூட பெரும் சிக்கலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
எவ்வாறியினும் அடுத்த மாதம் அவர் சிறிலங்காவிற்கு செல்வார் என்றும், முன்னாள் அதிபருக்கான சிறப்பு ஏற்பாடுகள் அவருக்கு கிடைக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அதுமாத்திரமன்றி தான் தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு சேவையாற்ற தயாராக இருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பதும் நினைவுபடுத்தத்தக்கது.
