20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு
நாடு அதளபாதாளத்திற்கு போக பிரதான காரணம்
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள அதிபர் இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது “ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான்” என்பதை புரிந்து வைத்திருப்பார்.
எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்
“ இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் அதிபராக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம். அந்த வகையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.
அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேசியிருக்கிறது.
இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் அதிபராக இருந்திருக்கிறார்களோ? அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அக்கிராசன உரையில் தமிழர்களின் பிரச்சினை வருமா?
ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார். இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?
அல்லது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச போன்று, மக்களால் விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது” என்றார்.
