உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவராக ஈழத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வரலாற்றில் இடம்பெறுகிறார்.
மண் விடுதலையில் பெண்களின் பங்களிப்பை ஆணை மிஞ்சிய வீரத்தாலும் அறிவாற்றலாலும் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாத்தியப்படுத்தினார்.
உலக நாடுகளில் சர்வதேச பெண்கள் தினம் வெறும் சடங்காகவே கொண்டாடப்படுகின்றது.
இந்த நிலையில் ஈழத்தில் போர்க்கங்களில் சாதனைகளை பெண்கள் நிகழ்த்திய புதிய வரலாற்றினை எழுதிய நிலையில் ஈழத்தில்தான் தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் அர்தமிகு நாளாக கொண்டாடப்பட்டிருக்கிறது.
பெண்களை மையப்படுத்திய இனவழிப்பு
எந்தவொரு சமூகத்திலும் பெண்களை ஒடுக்குவது என்பது அந்த இனத்தை முழுமையாக அழிப்பதற்கே வழிகோலும்.
சிறிலங்கா அரசு, காலம் காலமாக ஈழத்தில் பெண்களை ஒடுக்கி அழிக்கின்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.
பெண்களை ஒடுக்குவதன் மூலம், பெண்களை இலக்கு வைத்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஈழத் தமிழ் இனத்தை அழித்துவிடலாம் என்பது சிறிலங்கா அரசின் கணிப்பு.
அதனால்தான் ஈழத்தில் சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெண்ணுரிமை குறித்து பேசும் இந்த உலகம் ஈழத் தமிழ் பெண்களின் உரிமைகள் குறித்து மாத்திரம் மௌனித்திருப்பது வேடிக்கையும் வேதனையுமாகும்.
மார்ச் உலகளவில் பெண்ணுரிமை குறித்து பேசப்படும் மாதம் என்ற நிலையில், ஈழத்தில் அது எப்படிக் கடந்து செல்கிறது என்பதை இப் பத்தி ஆராய முயல்கிறது.
சர்வதேச பெண்கள் தினம்
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
அத்துடன் பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
ஐடபிள்யுடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நாள், 1908இல் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றவேளையில் சிந்தனை துளிர்விட்டது.
இந்த நாளை பன்னாட்டு நாளாக அறிவிக்கவும் அனுசரிக்கவும் வேண்டும் என்ற சிந்தனையை பொதுவுடமைவாதியும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவருமான கிளாரா ஜெட்கின் முன்வைத்தார்.
1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் கிளாரா ஜெட்கின் இவ் எண்ணத்தை பரிந்துரைத்தார்.
அதில் 17 நாடுகளை சேர்ந்த நூறு பெண்கள் இருந்தனர். எனினும் அனைத்துலகப் பெண்கள் தினம் முதன் முதலாக 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாப்பட்டது. அந்த வகையில் நூறு ஆண்டுகளைக் கடந்து இந் நாள் அனுசரிக்கப்படுகிறது.
மாலதி என்றொரு ஈழப் பெண்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் மாவீரராக தமிழ் ஈழத்தின் முதல் பெண் மாவீரராக மாலதி அவர்கள் தமிழ் ஈழத்தில் பெண் விடுதலையின் முதன்மை அடையாளமாகும்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட மாலதி அவர்களின் வீர மரணம், ஈழப் பெண்களின் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பெருந்தாக்கமாய் மாறிற்று.
தமிழீழ விடுதலைக் களத்தில் பெண்கள் ஆற்றிய சாதனைகள், அன்றைய தமிழ் ஈழத்தின் சமூக எழுச்சிக்கும் ஆற்றலுக்கும் உயர்வுக்கும் பெருவழி சமைத்தது.
காயமடைந்த நிலையில், தொண்டைக் குழியில் நஞ்சுடன் “எனது துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்” என்ற அவரின் இறுதிக் குரல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்றும் அடங்காத தீராத குரலாயிற்று. அன்றைய தமிழீழம் என்பது பெண்களுக்கு பேரிடத்தை வழங்கியது.
ஆண்களும் பெண்களும் சமம் என்ற சிந்தனையை தான் உலக நாடுகள் ஆகச் சிறந்த அடைவென்றும் உயர்வென்றும் கொண்டிருந்த நிலையில், ஆண்களைவிடப் பெண்கள் மேலானவர்கள் என்பதை வரலாற்றினாலும் சரித்திரத்தினாலும் ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாத்தியமாக்கினார்.
இதனால் இரண்டாம் லெப் மாலதி, கப்படன் அங்கயற்கண்ணி, மேஜர் சோதியா, கஸ்தூரி, கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி என்று ஈழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் உலகின் முன்னூதாரணம் மிக்க பெண்கள் என மிளிர்ந்தனர்.
தமிழீழத்தில் பெண்ணெழுச்சி
அன்றைய தமிழ் ஈழத்தில் அக்டோபர் 10 தமிழ் ஈழப் பெண்களின் எழுச்சி நாளாய் தனித்த அடையாளத்துடன் இருக்கும்.
பெண் போராளிகளின் அணிவகுப்பு, வீரப் பெண் தளபதிகளின் வழிநடத்தல் என்று ஈழ தேசம் எங்கும் தமிழீழ மகளீர் எழுச்சி நாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெறும்.
உண்மையில் சிறப்பு தினங்கள் என்பன வெறும் தினங்களாக மாத்திரம் அன்றிருக்கவில்லை என்பதையே இது சொல்ல விளைகிறது. இன்றைய காலத்தில் பல்வேறு தினங்களும் கொண்டாடப்படுகின்றன.
பெயரளவில் தான் அந்த தினங்கள் இருக்கின்றனவே தவிர, அர்த்தம் அளவில் அந்த தினங்களுக்கு எதிரான நிலையில்தான் உண்மை இருக்கிறது.
அன்றைய காலத்தில் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழக்கும் தேசமாக தமிழர் தேசம் இருந்தது.
நள்ளிரவு வேளையிலும் ஒரு பெண் தனியாய் பயணம் செய்கின்ற சுதந்திரமும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது.
அத்துடன் கொடிய போர்க்காலத்திலும் பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு அவலங்களையும் துயரங்களையும் எதிர்கொள்ளுகின்ற நடவடிக்கைகள், பயிற்சிகள் அன்றைக்கு இருந்தன.
பெண்களுக்கு போர்க்காலத்திலும் பல்வேறு வேலை வாய்ப்புக்கள் இருந்தன. குறிப்பாக தமிழீழ காவல்துறையில் பெண் காவல்துறைப் பிரிவு பெண்கள் சார்ந்த பல்வேறு நலன்களை முன்னெடுத்த கட்டிக்காத்த அமைப்பு என்ற பெருமையை வகித்தமை முக்கியமானது.
ஒரு இலட்சம் விதவைகள்
உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் விதவைகள் வறுமையின் பிடியில் உள்ளனர்.
85 மில்லியன் விதவைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன் விதவைகள் குழந்தைகளுடன் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
இதில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வடக்கு கிழக்கில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசின் குறிப்பிடத்தக்க சாதனை இதுவாகும். இந்த புள்ளி விபரத்தை இலங்கை அரசின் கணக்கெடுப்புகளின் வாயிலாகவே அறிகிறோம்.
அத்துடன், கிழக்கில் சுமார் 49ஆயிரம் விதவைகளும் வடக்கில் சுமார் 40ஆயிரம் விதவைகளும் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
போர் விதவைளில் 12ஆயிரம் பேர் நாற்பது வயதை அண்மித்தவர்கள் என்றும் 8000ஆயிரம் பேருக்கு மூன்று வயதுப் பிள்ளைகள் இருக்கின்றன என்றும் இலங்கை அரசின் மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் கூறியிருக்கின்றன.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால் சிறுபான்மை ஈழத் தமிழர்களின் பெரும்பான்மையாக விதவைகள் எனப்படும் கைம்பெண்கள் வசிக்கின்ற நிலை வாயிலாக நாம் அவதானிக்க வேண்டிய செய்திகள் மிகவும் முக்கியமானது.
பெண்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகள்
போரில் அதிக ஆண்கள் கொல்லப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு என்றும் அங்கே தான் அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம் கூறுகின்றது.
இராணுவத்தால் நிரப்பப்பட்ட வடக்கு - கிழக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் அவலங்களும் இன்று மிகுந்த சிக்கல் கொண்டவை. பெண்போராளிகள் காவல் செய்த நிலத்தில், விடுதலை அமைப்பை சிதைத்த பிறகான சூழல் என்பது மிகவும் நெருக்கடியாக இருக்கிறது.
தன்னை சிதைத்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டுகிற சிறுமியொருத்தின் தேசமாக வடக்கு கிழக்கு இன்று மாறிவிட்டது.
இப்படித்தான் இன்று ஈழ மண்ணில் பெண்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கால்கள் தேயத் தேடும் தாய்மாரின் கண்ணீரின் மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட கணவன்மாரை கால்கள் தேயத் தேடும் பெண்களின் துயரத்தின் மத்தியிலும் தான் இந் நாளும் கொண்டாட்டமும் கடந்து செல்கிறது என்பதே துயரமானது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் பெண்களை இராணுவ எந்திரம் கொண்டு அடக்கப்படுவதும், துப்பாக்கிளால் மிரட்டப்படுவதும்தான் ஈழத்தில் பெண்களின் இன்றைய நிலை.
அதேவேளை தாய்மார்கள் அல்லது பெண்கள் கண்ணீர் சிந்துகின்ற மனம் எரிந்து துயருகின்ற நாட்டின் அரசியல் என்பது சாபகரமானதாகவே இருக்கும்.
ஈழம் வயிற்றில் நெருப்பை எரித்து வாழும் கண்ணகிகளின் தாயகமாக இருக்கிறது. இன்றளவும் நெருப்பு நிரம்பிய அந்தத் தாய்மார்களின் கண்ணீரே எமக்காய் களமாகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 08 March, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 22 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்