மனைவிக்கு தொந்தரவு - நடு வீதியில் வைத்து வெட்டப்பட்ட கணவன் (படங்கள்)
அம்பாறை - கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
விசாரணை
இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ள நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பின்னணி
இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் சாய்ந்தமருது காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும், கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
