வெள்ளத்தினால் 1200 மில்லியன் ரூபா பெறுமதியான இறால்கள் அழிவு
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1200 மில்லியன் ரூபா பெறுமதியான இறால்கள் அழிவடைந்துள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ஜே.பி. சமிந்த லக்மால் (J.P. Saminda Lakmal) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் மாவட்டத்தில் உள்ள 8 பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1700 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறால் பண்ணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்டத்தில் 850 இறால் பண்ணைகள் காணப்படுகின்ற போதிலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினல் மூழ்கி, 163 இறால் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 1200 மில்லியன் பெறுமதியான 800 தொன் கொண்ட இறால்கள் அழிவடந்துள்ளன.
சுமார் 95 மில்லியன் பெறுமதியான இறால் குஞ்சுகளும் வெள்ளத்தினால் முழுமையாக அழிவடைந்துள்ளன.
இவ்வாறு வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இறால் பண்ணைகளின் வளர்ப்பாளர்களுக்கு நஷ்டஈடாக இறால் குஞ்சுகளை கொள்வனவு செய்து கொடுக்க நிதி அமைச்சிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பி வைத்திருக்கிறோம்.
எனினும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ஜே.பி. சமிந்த லக்மால் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாம் கடன்களைப் பெற்று இறால் வளர்ப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அதிகளவிலான இறால்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுவதாகவும் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அண்மையில் புத்தளம் விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.
எனவே, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியின்படி அரசாங்கம் உடனடியாக நஷ்டஈட்டைப் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பில் ஈடுப்பட்டுள்ள பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.