13ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு திருத்தத்திற்குள் உள்ளது - தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் கருத்து
''உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் ஒரு அரசியல் தீர்வு அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும், அந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் அரசியலமைப்பாக்கப்பட்டால் அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கு நாங்கள் ஆதரவு வழங்கலாம்.'' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13ஆவது திருத்தம்

''எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப்போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படவேண்டியதான தீர்மானத்தை எதிர்வரும் தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் எடுக்கவுள்ளோம்.
தற்போது அதிபர் அவர்கள் இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் 13ஆவது திருத்தம் சம்பந்தமாகவும் நாடாளுமன்றத்திலே உரையாற்றியிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னர் ரொமேஸ் டி சில்வா ஆணைக்குழு தலைமையில் தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வாறானதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
பெரும்பாலான கட்சிகளின் கருத்து

தற்போது 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் அதிபர் அவர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குறிப்பிட்ட கருத்துக்களும் அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்கின்ற விவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன.
13ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு திருத்ததிற்குள் உள்ளது என்பது தமிழரசுக்கட்சியினதும் பெரும்பாலான தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாக கொண்ட கட்சிகளினதும் கருத்தாகும்.
இதேவேளை திவிநெகும போன்ற சட்டங்கள் மூலம் மத்திய அரசு திரும்ப அதிகாரங்களை எடுக்ககூடிய வாய்ப்புகள் இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.